ஜப்பானில் இவ்வாண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது.
கோவிட்19 தொற்று நோயில் இருந்து தங்கள் நாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசு தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு ஏதும் இல்லை என வட கொரிய தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அவ்வாறு வட கொரிய முற்றிலுமாகத் தப்பிப் பிழைத்திருப்பது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும் வட கொரியாவில் சுயாதீன ஊடகங்கள் செயற்பட முடியாமை மற்றும் அங்குள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் நிலைமைகளை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என்ற வட கொரியாவின் அறிவிப்பால் விளையாட்டு ஊடாக வட கொரியா உடனான உறவுகளை வலுப்படுத்தும் தென் கொரியாவின் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வட கொரியா தனது அணியை அனுப்பி வைத்தது.
இதனைத் தொடர்ந்து கொரிய போரால் இருநாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வந்த பகைமை கடந்த 2018-இல் தணிந்தது. சமாதான கிராமமான பன்முன்ஜோமில் 2018 ஏப்ரல் 27-ஆம் திகதி வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி முன் ஜே-இன் இடையில் உச்சிமாநாடு நடைபெற்றது.
அணு ஆயுத ஒழிப்பு, அமைதியை உருவாக்குதல், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை சீரமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.
இம்முறையும் ஒலிப்பிக் போட்டிகளைப் பயன்படுத்தி வட கொரியாவுடனான உறவுகளை வலுவாக்க தென் கொரியா எதிர்பார்த்திருந்த நிலையில் போட்டியில் பங்கேற்பதில்லை என்ற வட கொரியாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் தொற்றுநோய் அச்சம் காரணமாக இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியைத் தவிர்த்த முதல் பெரிய நாடாக வட கொரியா திகழ்கிறது.
கடந்த மார்ச் 25 -ஆம் திகதி நடந்த ஒலிம்பிக் தேசிய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசால் நடத்தப்படும் டி.பி.ஆர்.கே. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதை அடுத்து வட கொரிய கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரயில்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் வட கொரியாவிற்குள் நுழையவோ அங்கிருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சர்வதேச பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.